இதுவல்லவோ வெற்றி... பிற நாடுகளையும் ஆச்சரியப்பட வைத்துள்ள வெற்றி என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த முறை அமைதியாக ஆனால் வெகு ஆவேசமாக மீண்டும் வீசிய மோடி அலையால் பல்வேறு கட்சிகளும் அஸ்திவாரம் ஆட நடுங்கி போய் உள்ளன.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றால் அது இந்தியாதான். இங்கு 17-வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. தேர்தல் ஓட்டுப்பதிவுகள் கடந்த 19ம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் 543 தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.
நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. ஆரம்பம் முதலே நாடு முழுவதும் மோடி அலை வீசியது தெரிந்து விட்டது. பாரதிய ஜனதா கூட்டணி-349 இடங்களிலும் காங். கூட்டணி-96 இடங்களிலும் இதர கட்சிகள்-97 இடங்களையும் பிடித்துள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் 302 தொகுதிகளில் வெற்றி பெற்று பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கட்டலில் அமர்கிறது. மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.
என்னதான் நாடு முழுவதும் மோடி அலை வீசினாலும் தமிழக வாக்காளர்கள் தாங்கள் தனித்தன்மை கொண்டவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். தமிழகத்தில் பாஜ கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. தமிழக வாக்காளர்கள் மனநிலை வேறாக இருந்தது. இதனால் நாடே தமிழகத்தை அதிசயத்துடன் பார்த்து வருகிறது.
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 349 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 302 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கியமாக குஜராத், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், அரியானா மாநிலங்களிலும் மற்றும் தலைநகர் டெல்லி என பாரதிய ஜனாதாவின் அலையே உயர்ந்து காணப்பட்டது. இந்த மாநிலங்களில் உள்ள அனைத்து தொகுதிகளையும் அனாயசமாக அள்ளி உள்ளது பா.ஜ.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட்ட பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜ தலைவர் அமித்ஷா, லக்னோவில் போட்டியிட்ட ராஜ்நாத் சிங், நாக்பூரில் போட்டியிட்ட நிதின் கட்காரி, அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி இரானி உட்பட பாஜ மூத்த தலைவர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
மத்தியில் மோடி தலைமையில் பாரதிய ஜனதா கூட்டணி 2-வது முறையாக அரியணை ஏறுகிறது. காங்கிரஸ் அல்லாத கட்சியின் தலைவர் 2வது முறையாக பிரதமர் பதவி ஏற்பது இப்போதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் வீசிய மோடி அலையால் பெரும் பாதிப்பு காங்கிரஸ் கட்சிக்குதான். இதனால் கட்சி தலைவர் ராகுலுக்கு பெரும் சிக்கல் எழுந்துள்ளது. அவரது தலைமை வழிகாட்டுதல் சரியில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணிக்கு கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் ஆகிய 3 மாநிலங்கள் மட்டுமே கைகொடுத்து உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் 18 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. அங்கு ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு 2 இடங்களே கிடைத்துள்ளன. பாரதிய ஜனதா ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..
உத்தரபிரதேச மாநிலம் அமேதி கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார. ஆனால் அமேதி தொகுதி அவரை கவிழ்த்து விட்டுள்ளது. ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச் சேரியில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் அ.தி.மு.க-பாஜனதா கூட்டணியில் 20 தொகுதிகளில் களம் இறங்கிய அ.தி. மு.க. தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.